/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கால்வாய் பணி கூடுவாஞ்சேரியில் துவக்கம்
/
கழிவுநீர் கால்வாய் பணி கூடுவாஞ்சேரியில் துவக்கம்
ADDED : நவ 25, 2024 02:11 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, டிபன்ஸ் காலனி நான்காவது தெருவில், பணிபுரியும் பெண்களுக்கான அரசு தங்கும் விடுதி உள்ளது.
இந்த விடுதியை, சமூக நலத்துறை சார்பில், தமிழக பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் பராமரித்து வருகிறது.
இதில், 120 பெண்கள் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்த விடுதியின் அருகில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு, தினமும் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இடம், வீடு, வாங்குவோர் பத்திரப்பதிவு செய்வதற்கு வருகின்றனர்.
மகளிர் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி, சார் - பதிவாளர் அலுவலகம் முன், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்த சாலை முழுதும் துர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.
இது குறித்து நம் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயந்தி, நகராட்சி தலைவர் கார்த்திக் மற்றும் கமிஷனர் ராணி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
அதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்து, டெண்டர் கோரப்படாமல், உடனடி தீர்வாக கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை, இன்னும் பத்து நாட்களுக்குள் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.