/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்
/
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்
ADDED : ஜூலை 10, 2025 01:30 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், நோய் வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்தில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயத்திற்கு அடுத்து கால்நடைகள் வளர்ப்பு அதிகமாக உள்ளது.
அச்சிறுபாக்கம், லத்துார், மதுராந்தகம், சித்தாமூர் ஒன்றியங்களில், 1.20 லட்சத்திற்கும் அதிகமான கறவை மாடுகள் உள்ளன.
3 லட்சத்திற்கும் அதிகமான செம்மறி ஆடுகள், 2 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் மொத்தம், 28 அரசு கால்நடை மருத்துவமனைகள், 7 கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன.
கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், இந்த கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த இரு வட்டாரங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில், 28 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 14 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
கப்பிவாக்கம், சூணாம்பேடு, கயப்பாக்கம், செங்காட்டூர், படாளம் உள்ளிட்ட, 14 கால்நடை மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால், ஒரே மருத்துவர் நீண்ட துாரம் பயணம் செய்து, பொறுப்பு கால்நடை மருத்துவராக வேறு ஒரு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதனால், மருத்துவர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இது தவிர, தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என மூவரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அத்துடன், பெரும்பாலான மருந்தகங்களில் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.
இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக, மாடு வளர்க்கும் சில விவசாயிகள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், ஊழியர்களை தேடிக் கண்டுபிடித்து, செலவு செய்து தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
பல விவசாயிகள், தனியார் மருந்தகங்களில் மருந்து மற்றும் ஊசிகள் வாங்கி, சுயமாக தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தாலும், அதிகமாக கால்நடைகள் உள்ள மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் இல்லாதது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.