/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கை ரயில் நிலையத்தில் மர்மநபர்கள் நடமாட்டம்
/
சிங்கை ரயில் நிலையத்தில் மர்மநபர்கள் நடமாட்டம்
ADDED : செப் 23, 2024 06:12 AM
மறைமலை நகர் : செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் தடத்தில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும், 60 மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.
இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி, திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொண்டமங்கலம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாம்பரம், கிண்டி, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.
இங்கு, இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாக, ரயில் பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தின் கடைசி பகுதியில், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இந்த பகுதியில் அமர்ந்திருக்கும் நபர்கள், எந்த ரயில் வந்தாலும் செல்வதில்லை.
இந்த வழியாக, தண்டவாளம் ஓரம் உள்ள வழியில் நடந்து செல்லும் பெண் பயணியரை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம், முதல் நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணின் தங்க செயினை, மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, பாட்டில்களை நடைமேடையில் வீசி செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
எனவே, இந்த பகுதியில், பயணியர் அதிகம் சென்று வரும் இரவு 9:30 மணி வரை, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.