/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் கடந்தாண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
/
செங்கை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் கடந்தாண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
செங்கை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் கடந்தாண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
செங்கை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் கடந்தாண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
ADDED : அக் 16, 2025 09:43 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், கடந்தாண்டை விட இந்தாண்டு, 10 அரசு பள்ளிகள் கூடுதலாக மாணவர்களை சேர்த்து அசத்தி உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
மாவட்டத்தில், 481 துவக்கப் பள்ளிகள், 188 நடுநிலைப் பள்ளிகள், 65 உயர்நிலைப் பள்ளிகள், 80 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 814 பள்ளிகள் உள்ளன.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநுால், நோட்டு புத்தகம், சீருடை, புத்தக பை, புவியியல் வரைபடங்கள், கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில், காலணி, மிதிவண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மேலும், 'கல்லுாரி கனவு, உயர்வுக்குப் படி' மற்றும் மன்ற செயல்பாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுஒருபுறம் இருக்க, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
கல்லுாரி சேர்க்கை முதல், அரசு பணிகள் வரை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிராமவாசிகள், நகரவாசிகளிடம் பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை 2025 - 26ம் கல்வியாண்டில், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுதும் அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில் தலைமையாசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தமிழகத்தில், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை விட, நடப்பு கல்வியாண்டில், 13 அரசு துவக்கப் பள்ளி, 13 நடுநிலைப் பள்ளி, 17 அரசு உயர்நிலைப் பள்ளி, 136 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய தலைமையாசிரியர்களுக்கு, கடந்த 7ம் தேதி சென்னையில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 10 அரசு பள்ளிகள், கூடுதலாக மாணவர்களை சேர்த்து அசத்தி உள்ளன.
இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் எடுத்த முயற்சிக்கு, பலன் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, திருப்போரூர் வட்டாரத்தில் உள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் பொதுப்பள்ளி, இந்தாண்டு கூடுதலாக, 199 மாணவர்களை சேர்த்து அசத்தியுள்ளது. இதுபோன்று, அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.