/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொந்தமாக கோசாலை அமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
/
சொந்தமாக கோசாலை அமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
சொந்தமாக கோசாலை அமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
சொந்தமாக கோசாலை அமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
ADDED : ஜூலை 07, 2025 11:38 PM
தாம்பரம், சாலைகளில் உலவும் மாடுகளை பிடித்து பாதுகாக்க, தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கென, சொந்தமாக கோசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, 70 வார்டுகள், 5 மண்டலங்களை கொண்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாலைகளில் உலவும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. சில உரிமையாளர்கள், அங்கேயே 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி, தங்கள் மாடுகளை பிடித்து செல்கின்றனர்.
அபராதம் செலுத்த முன்வராத உரிமையாளர்களின் மாடுகளை, செங்கல்பட்டு அருகேயுள்ள கொண்டமங்கலம் கோசாலையில் அடைத்து வந்தனர்.
அங்கு ஒப்படைக்கப்படும் மாடுகளை, 15 நாட்களுக்குள், அதன் உரிமையாளர்கள், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி அழைத்து செல்ல வேண்டும் எனவும், இல்லையெனில் அந்த மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அங்கு ஒப்படைக்கப்படும் மாடுகள் முறையாக பராமரிக்கப்படாததால், சமீபகாலமாக வாலாஜாபாத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்., டிரஸ்ட் கோசாலைக்கு மாடுகள் அனுப்பப்படுகின்றன. அங்கு, மாடு ஒன்றுக்கு, 2,000 ரூபாய் பராமரிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது.
மாடுகளை அடைக்க முறையான கோசாலை இல்லாததால், மாநகராட்சி பகுதியிலேயே கோசாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான இடங்களை தேடி வந்தது.
இந்நிலையில், 5வது மண்டலம், மாடம்பாக்கம், ராஜம்மாள் நகரில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அங்கு கோசாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், கோசாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் கோசாலை, 50 மாடுகளை பராமரிக்கும் அளவிற்கு அமைக்கப்படும்.
மாநகராட்சி பகுதிகளில் பிடிக்கப்படும் மாடுகள், இங்கு அடைக்கப்படும் எனவும், 15 நாட்களுக்குள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி அழைத்து செல்லலாம் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.