/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு
/
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு
ADDED : பிப் 07, 2024 11:09 PM

செங்கல்பட்டு:சம்பா, நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், கூடுதலாக 104 இடங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், பிப்ரவரி முதல் வாரம் துவங்கி, ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், 1,86,257.5 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
சம்பா பருவத்தில், 25,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2023- - 24 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு, 2,310 ரூபாயும், பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,265 ரூபாயும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, 104 இடங்களில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 86 கொள்முதல் நிலையங்களும், தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம், 18 கொள்முதல் நிலையங்களும் அமைக்கின்றன.
இதையடுத்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் கொமுதல் நிலையத்தை, அமைச்சர் அன்பரசன் இன்று துவக்கி வைக்கிறார்.
கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மாவட்டத்தில், சம்பா, நவரை பருவத்தில் நெல் பயிரிடப்பட்டது. சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வர உள்ளது. அதனால், தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும், பிப்., முதல் வாரத்தில் துவங்கி, ஏப்., முதல் வாரம் வரை செயல்படும். விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
- தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

