/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணியர்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணியர்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : ஜன 17, 2025 01:18 AM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், காணும் பொங்கல் பண்டிகையொட்டி, நேற்று, சுற்றுலாப் பயணியர் குவிந்தனர்.
மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர் பிடிப்பு கொண்ட ஏரி முழு கொள்ளளவு நிரம்பியது.
பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன.
டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மார்ச், ஏப், மே மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
தற்போது கூழைக் குடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன.
இந்நிலையில் காணும் பொங்கல் விடுமுறை யொட்டி, நேற்று, வேடந்தாங்கல் சரணாலயத்தில் 3,500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டு சென்று உள்ளதாக, பறவைகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
* சென்னை, சுற்றுபுற பயணியர், நேற்றைய காணும் பொங்கல் சுற்றுலாவிற்கு, மாமல்லபுரம் வந்தனர். பயணியர், காலை, 10:00 மணியிலிருந்தே, அரசு பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வர துவங்கி, 11:00 மணி கடந்து, கூட்டம் படிப்படியாக அதிகரித்தது.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு வெண்ணெய் உருண்டை பாறை, பிற குடவரைகள் ஆகிய இடங்களில், குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என, பயணியர் கூட்டம் அலைமோதியது. சிற்பங்கள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து, மகிழ்ந்தனர்.
போலீசார், முக்கிய சாலைகளில், போக்குவரத்தை கண்காணித்து ஒழுங்குபடுத்தினர். முட்டுக்காடு, முதலியார்குப்பம், சுற்றுலா வளர்ச்சி படகு குழாம்கள், முதலைப்பண்ணை, கடலோர, தனியார் பொழுதுபோக்கு பூங்காங்களிலும், பயணியர் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலாத்தலம், வண்டலுார் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலம், முட்டுக்காடு, கோவளம், ஆலம்பரைகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று, பொதுமக்கள் குவிந்தனர்.
இதுமட்டும் இன்றி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம், ஆதிபராசக்தி அம்மன், திருவடிசூலம் கருமாரியம்மன், திருப்போரூர் முருகன்கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர், மலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தில், முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக, எஸ்.பி., சாய் பிரணித் தெரிவித்தார்.
- நமது நிருபர் குழு-