ADDED : ஆக 31, 2025 03:36 AM

தாம்பரம்:மழையால், தாம்பரம் - சோமங்கலம் சாலை சகதியாக மாறி, கன்னடபாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் - சோமங்கலம் சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிவட்ட சாலையை இணைக்கிறது.
இதில், தாம்பரம் அருகே கன்னடபாளையம் முதல் வரதராஜபுரம் வரை 2 கி.மீ., சாலையில், மண் நெகிழ்வு தன்மையை இழந்ததால், சாலை உள்வாங்கி அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது.
இதை தடுக்க, இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி, தரைமட்டத்திற்கு கீழ் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த பணிகளால், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை, தாம்பரம் சுற்றுப்புறத்தில் கன மழை பெய்தது. இதனால், சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள், வரதராஜபுரத்தில் இருந்து கன்னடபாளையம் பகுதியை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.