/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராமிய பொங்கல் விழா ஜப்பான் துாதர் குதுாகலம்
/
கிராமிய பொங்கல் விழா ஜப்பான் துாதர் குதுாகலம்
ADDED : ஜன 12, 2024 11:23 PM

திருக்கழுக்குன்றம்:காஞ்சிபுரம் நிப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அமைப்பின் சார்பில், திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கருணையில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில், அமைப்பின் தலைவரும், முன்னாள் காஞ்சிபுரம் காங்., - எம்.பி.,யுமான விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக, ஜப்பான் துாதர் டகா மசாயுகி, பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.
அதன்பின் அவரும், அமைப்பினரும் மரக்கன்றுகள் நட்டனர். அங்கிருந்து வீதி வழியே, குறிப்பிட்ட தொலைவு நடந்தே சென்றவர், பொங்கல் பண்டிகை, தமிழர் கலாசாரத்தை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்.
பின், சாலையில் போடப்பட்டிருந்த வண்ணக் கோலங்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்தார். வண்ண மலர் தோரணங்களில் அலங்கரித்த மாட்டு வண்டியில், விழா பகுதிக்கு சென்றார்.
அவருக்கு வேதமந்திர முழக்கத்துடன் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பெண்கள் அலங்கார பானைகளில் பொங்கலிட்டனர். கலைஞர்கள், பரதம், சிலம்பம், பறை உள்ளிட்ட நடனமாடினர்.
தமிழரின் பண்டிகை பாரம்பரியம், விவசாய அறுவடை கால பொங்கல் கொண்டாட்டம், கலாசார பண்பாட்டு கலைகள் குறித்து கேட்டறிந்தார். இதில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.