/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்பயிற்சி மாணவர்கள் பேருந்துகளில் சாகச பயணம்
/
தொழிற்பயிற்சி மாணவர்கள் பேருந்துகளில் சாகச பயணம்
ADDED : நவ 14, 2024 01:34 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
செய்யூர், மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுபாக்கம், பவுஞ்சூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து, இந்த அரசு தொழில் பயிற்சி மையம் வந்து செல்கின்றனர்.
நாள்தோறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி மையத்திற்கு காலை, மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு, போதிய அரசு பேருந்துகள் இல்லாததால், தனியார் பேருந்துகளில் செல்லும் நிலை உள்ளது.
தனியார் பேருந்து படிக்கட்டுகளிலும், பின்பகுதியில் உள்ள ஏணிகளிலும், பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளிலும் சாகச பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
இந்த தடத்தில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால், ஷேர் ஆட்டோ, தனியார் பேருந்துகளில் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக, மாணவியர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் பலரும், சாகச பயணம் செய்கின்றனர். இதனால், நடத்துனர் மற்றும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, பேருந்துகள் பாதி வழியில் நிறுத்தப்படுகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த தடத்தில், கடந்த மார்ச் மாதம் தனியார் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த நான்கு கல்லுாரி மாணவர்கள் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றபோது, பக்கவாட்டில் நின்றிருந்த லாரி மீது மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.