ADDED : செப் 04, 2025 09:21 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, நல்ல பாம்பு கடித்து, பெண் பலியானார்.
அச்சிறுபாக்கம் அருகே சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை, 50, என்பவரது மனைவி ஏகவல்லி, 45.இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்புறம் உள்ள மண்பானையில் இருந்து தண்ணீர் எடுத்து முகம் கழுவியுள்ளார்.
அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு, ஏகவல்லியின் வலது கையில் கடித்துள்ளது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு, ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின், திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு, ஏகவல்லியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தகவல் அளித்து உள்ளனர். பின், பிரேத பரிசோதனை முடிந்து, உடல் உறவினர்களிடம் , ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து, ஒரத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.