/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
/
அரிசி ஆலை நெற்களத்தில் கொத்தடிமைகள் மீட்பு
ADDED : ஜூலை 14, 2011 11:03 PM
செங்குன்றம் : அரிசி ஆலை நெற்களங்களிலிருந்த, எட்டு கொத்தடிமை தொழிலாளர்களை, வருவாய்த்துறையினர் மீட்டனர்.
சென்னை செங்குன்றம், சோழவரம், காரனோடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், 80க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், அதனைச் சார்ந்த நெல் பதப்படுத்தும் களங்கள், செங்கல் தொழிலகங்கள் உள்ளன.
இவற்றில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வேலை செய்து வருகின்றனர். முன் பணம் கொடுத்து, இவர்கள் வேலைக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், அப்படி அழைத்து வரப்படும் தொழிலாளிகள், ஒரு சில இடங்களில், தொழிலாளர் விதிகளுக்கு புறம்பாக 'கொத்தடிமைகளாக' நடத்தப்படுவதாக, புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி, மாதவரம் தாசில்தார் பாண்டியன், செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் இளவரசி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் செங்குன்றம், தீர்த்தகரையம்பட்டு, வடகரை, விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது செங்குன்றம் தீர்த்தகரையம்பட்டு, சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை மின் வாரிய அலுவலகம் அருகே உள்ள, குருசாமி என்பவருக்கு சொந்தமான நெற்களத்தில், கொத்தடிமை தொழிலாளிகள் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்த கதிர், 35, அவரது மனைவிகள் கஸ்தூரி, 27, அம்முலு, 25, சதீஷ், 15, கஜேந்திரன், 48 அவரது தம்பி சங்கர், 30, இவரது மனைவி சாந்தி, 25, மற்றும் வீரசங்கர், 16, என மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களான செங்கல்பட்டு, சாலவாக்கம், மாமண்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

