வி.ஐ.டி., – கொலம்பியா பல்கலை இரட்டை பட்டப்படிப்புக்காக ஒப்பந்தம்
வி.ஐ.டி., – கொலம்பியா பல்கலை இரட்டை பட்டப்படிப்புக்காக ஒப்பந்தம்
ADDED : ஆக 29, 2026 07:02 PM
சென்னை: கொலம்பியா பல்கலையுடன், வி.ஐ.டி., பல்கலை, இரட்டை பட்டப்படிப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலை வளாகத்தில், வி.ஐ.டி., பல்கலையுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.
நியூயார்க்கில் உள்ள இந்திய துாதரகத்தின் துணை துாதர் பினாய ஸ்ரீகாந்த பிரதான் தலைமையில், வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் கொலம்பியா பல்கலையின் கல்வி விவகாரங்கள், உலகளாவிய ஒருங்கிணைப்பு துறை ‘டீன்’ செனட்டர் சுலைமன் கச்சானி ஆகியோர் முன்னிலையில், இரு கல்வி நிறுவனங்கள் இடையே, இரட்டை பட்டப்படிப்பு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கொலம்பியா பல்கலையுடன், இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் இந்திய பல்கலை வி.ஐ.டி., என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதன் கூறுகையில், ‘‘வி.ஐ.டி., மற்றும் கொலம்பியா பல்கலை இடையே, ஒரு மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. உலகத் தரத்திற்கேற்ற கல்வியை வழங்குவதிலும், மாணவர்களுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் சர்வதேச கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், வி.ஐ.டி., கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பை, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது,’’ என்றார்.
இந்த நிகழ்ச்சிவில், வி.ஐ.டி., துணை தலைவர் ஜி.வி.செல்வன், சர்வதேச உறவுகள் இயக்குநர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
*
