/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்டாக்சி ஓட்டுனர்கள் ஏர்போர்ட்டில் அடாவடி
/
கால்டாக்சி ஓட்டுனர்கள் ஏர்போர்ட்டில் அடாவடி
ADDED : ஜூலை 04, 2024 12:24 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தின் 'பிக் அப் பாய்ன்ட்' பகுதியில், உள்நாடு மற்றும் வெளிநாடு பயணியரின் தேவைக்கேற்ப செயலிகள் வாயிலாக வாடகை வாகனங்களை முன்பதிவு செய்து பயணம் செய்யும் வசதி இருக்கிறது.
ஆனால், விமானங்களில் இருந்து பயணியர் வந்தவுடனே, அங்கீகரிக்கப்படாத கால்டாக்சி ஓட்டுனர்கள் சிலர், வருகை பகுதியில் வழிமறித்து, பேரம் பேசி அழைத்து செல்கின்றனர்.
குறுகிய துாரத்துக்கே அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
குடும்பத்துடன் சுற்றுலா சென்று சென்னை விமான நிலையத்திற்கு இரவு திரும்பினோம். தனியார் செயலி வாயிலாக காருக்கு புக் செய்தோம்.
கார் வருவதற்கு தாமதமானதால், விட்டு, ஏ-3 வாயிலில் காத்திருத்தோம். அப்போது ஒருவர், வாடகை கார் வேண்டுமா என அணுகினார். அவரிடம் கட்டணம் குறித்து விசாரித்த போது, விமான நிலையத்தில் இருந்து அசோக்நகருக்கு 4,000 ரூபாய் கேட்டார்.
அதிக கட்டணம் என்பதால், அதை நிராகரித்த போது, அவர் தகாத வார்த்தையில் பேச துவங்கி விட்டார். அருகில் உள்ள போலீசாரை அணுகி புகார் தெரிவிப்பதற்குள், அங்கிருந்து மாயமாகிவிட்டார்.
எங்களை போலவே விமானத்தில் வந்த வடமாநில பயணியர் சிலரையும், இதே போல சில கார் ஓட்டுனர்கள் வழிமறைத்து எங்களிடம் செய்தது போல, தகராறில் ஈடுபட்டனர்.
ஒரு சர்வதேச விமான நிலையத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.