/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: மாநகர பஸ்களில் நெரிசல்
/
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: மாநகர பஸ்களில் நெரிசல்
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: மாநகர பஸ்களில் நெரிசல்
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: மாநகர பஸ்களில் நெரிசல்
ADDED : ஆக 16, 2024 11:48 PM

சென்னை : கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தடத்தில் செல்லும் மாநகர பேருந்துகளில் 30,000 பேர் கூடுதலாக பயணம் செய்து வருகின்றனர்.
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், வரும் 18ம் தேதி வரை, 63 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை - பல்லாவரம் இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் வழக்கமான மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி வழியாக பிராட்வேக்கு வழக்கமாக செல்லும் மாநகர பேருந்துகளோடு, கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் பயணியர் கூட்டம் அலைமோதியது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.
இதற்கு, மாற்றாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், கிண்டி, பிராட்வேக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சில பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக 5 - 7 ரூபாய் அதிகரித்து வசூலிக்கின்றனர். '18ஏ' தாம்பரம் - பிராட்வே சிறப்பு பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். கேட்டால், இது சிறப்பு பேருந்து என நடத்துனர்கள் கூறுகின்றனர்.
நெரிசல் அதிகமாக இருப்பதால், இந்த தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தடத்தில் தினமும் 70 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம்.
இதனால், தாம்பரம் - பிராட்வே வழித்தடத்தில் 25,000 முதல் 30,000 பேர், கூடுதலாக பயணம் செய்து வருகின்றனர். இருப்பினும், சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடவில்லை. நடத்துனர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.