/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்களத்துாரில் மாணவர் தற்கொலை ஹெச்.எம்., உட்பட 3 பேர் மீது வழக்கு
/
பெருங்களத்துாரில் மாணவர் தற்கொலை ஹெச்.எம்., உட்பட 3 பேர் மீது வழக்கு
பெருங்களத்துாரில் மாணவர் தற்கொலை ஹெச்.எம்., உட்பட 3 பேர் மீது வழக்கு
பெருங்களத்துாரில் மாணவர் தற்கொலை ஹெச்.எம்., உட்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : மார் 02, 2025 12:48 AM
பெருங்களத்துார், தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை, வேல் நகரை சேர்ந்தவர் கலாவதி, 47. சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவரின் மகன் யோசுவா, 15, பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
பிப்., 27ம் தேதி, பள்ளியில் இருந்து கலாவதியை தொடர்பு கொண்டு, உடன் படிக்கும் மாணவர் ஒருவரை, யோசுவா அடித்து விட்டதாக கூறி, பள்ளிக்கு வருமாறு அழைத்து உள்ளனர்.
அதற்கு, தற்போது வேலையில் இருப்பதால், மறுநாள் வருவதாக கலாவதி கூறியுள்ளார்.
கலாவதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது, யோசுவா கடிதம் எழுதி வைத்துவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீசார், மாணவர் யோசுவாவின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆசிரியர்கள் கண்டித்ததால், மன உளைச்சலில் இருந்த யோசுவா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மாணவர் எழுதிய கடிதத்தில், உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து விடுமாறும், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், அட்வகேட் மேடம் ஆகியோர், நான் செய்யாத தவறுக்கு திட்டியதால், எனக்கு மன உளைச்சல் ஆகிவிட்டது என்றும் எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம், மாணவர் இறப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக்கூறி, யோசுவாவின் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட முயன்றனர். பின், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், யோசுவாவின் தாய் கொடுத்த புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த அறிக்கை, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என்றும், அவர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்த பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, செங்கல்பட்டு கல்வி அலுவலர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம், நேற்று விசாரணை நடத்தியதாக தகவல் பரவி உள்ளது.