மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவடியில் உதவி மையம் திறப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவடியில் உதவி மையம் திறப்பு
ADDED : ஜூலை 24, 2026 07:22 PM
ஆவடி, ஜூலை 25-–-
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பாக மக்களுக்கு உதவ, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை 2027 சுய கணக்கெடுப்பு பணி நாடு முழுதும், கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன்படி, https://se.census.gov.in/ என்ற இணையதளத்தில், குடும்ப தலைவர் பெயர், மொபைல் போன் எண் ஓ.டி.பி., உள்ளீடு, அதன் பின் வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பதிவேற்ற வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்த தகவல்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். தகவல்களை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்த பின், வரும் 12 இலக்க எஸ்.இ., – ஐ.டி., எண்ணை குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் செய்த தகவல்களை மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்கள், ஆகஸ்ட் மாதம் நேரில் சென்று, சரி பார்த்து உறுதி செய்வர். இந்நிலையில், மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பாக மக்களுக்கு உதவ, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
