/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 12 மண்டலங்களில் 3 அடி வரை நிலத்தடி நீர் உயர்வு
/
சென்னையில் 12 மண்டலங்களில் 3 அடி வரை நிலத்தடி நீர் உயர்வு
சென்னையில் 12 மண்டலங்களில் 3 அடி வரை நிலத்தடி நீர் உயர்வு
சென்னையில் 12 மண்டலங்களில் 3 அடி வரை நிலத்தடி நீர் உயர்வு
ADDED : ஆக 09, 2024 12:29 AM
சென்னை, சென்னையில் அவ்வப்போது மழை பெய்வதால், கடந்த ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் 12 மண்டலங்களில், 3 அடி வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சி மணல், களிமண், பாறை கொண்ட அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பு. நிலத்தடி நீர் மட்டத்தை கணக்கிட, 200 வார்டிலும், நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டு சராசரி அளவில், 2021ஐ விட, 2022ல், 25 சதவீதம் மழை பொழிவு குறைவாக இருந்தது. இந்த வகையில், 2022ல் தென்மேற்கு பருவமழை, 44 செ.மீ.,யும், 2023ல் 78 செ.மீ.,யும் பெய்தது.
அதேபோல், வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ.,யும், 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ.,யும் பெய்தது.
இந்த ஆண்டு கோடையிலும் அவ்வப்போது மழை பெய்தது. மூன்று மாதங்களாக எதிர்பாராத மழை பெய்கிறது. இதனால் மே, ஜூன், ஜூலையில், பரவலாக நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில், தண்டையார்பேட்டை, ராயபுரம், அடையாறு மண்டலங்களை விட, இதர மண்டலங்களில், 3 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மொத்த மண்டலங்களை கணக்கிடும் போது, 1 அடி வரை உயர்ந்துள்ளது. அதே வேளையில், 2022, 2023, 2024ம் ஆண்டில், ஜூலை மாதங்களை கணக்கிடும் போது, கடந்த ஆண்டை விட ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.
இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்யும் போது, மழைநீர் பூமியில் தங்க வேண்டும். பெரும்பாலான இடங்கள், சிமென்ட், தார் கலவையால் நிரப்பப்பட்டதால், மண் பரப்பு குறைந்து விட்டது.
இதனால், மழைநீர் பூமிக்குள் இறங்குவதும் குறைந்து வருகிறது. மழைநீரில் குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்க வேண்டும். அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை மேம்படுத்த மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம் இணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்.