/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணி மந்தம் திட்டமிட்டபடி ஆகஸ்டில் முடிவது சந்தேகம்
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணி மந்தம் திட்டமிட்டபடி ஆகஸ்டில் முடிவது சந்தேகம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணி மந்தம் திட்டமிட்டபடி ஆகஸ்டில் முடிவது சந்தேகம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணி மந்தம் திட்டமிட்டபடி ஆகஸ்டில் முடிவது சந்தேகம்
ADDED : ஏப் 25, 2024 12:29 AM

சென்னை, வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில், புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. இதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் ஆகஸ்டில் முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 88 ஏக்கர் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூருக்குச் செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.
ஆனால், மின்சார ரயில் நிலைய இணைப்பு வசதி இல்லை. அதுபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில், போதிய அளவில் இணைப்பு பேருந்துகள் இயக்குவது இல்லை என, பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், கடந்த ஜன., 2ம் தேதி துவக்கப்பட்டன.
ஆனால், அங்கு பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. மந்த கதியில் பணிகள் நடப்பதால், ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் ஆகஸ்டில் பணிகள் முடிக்கப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் என்பது மிகவும் அவசியமானது. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, தற்போது மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதுவே, சில நேரங்களில் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை.
வடசென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், இரண்டு பேருந்துகள் மாறி மாறி செல்ல வேண்டி உள்ளது. எனவே, பயணியரின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டமைப்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
மூன்று நடைமேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கைகள், வாகன நிறுத்தம், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு, இந்த ரயில் நிலையம் அமையும்.
நில அளவை, நிலைய வடிவமைப்பு பணிகள் முடித்து, சில கட்டமைப்பு பணிகளை துவக்கி உள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பிரச்னை இல்லை என்பதால், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

