/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி மதுபாட்டில்களுடன் கண்டறியப்பட்ட மதுக்கிடங்கு
/
போலி மதுபாட்டில்களுடன் கண்டறியப்பட்ட மதுக்கிடங்கு
ADDED : பிப் 27, 2025 12:44 AM

சென்னை, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், ராயபுரத்தில், வெளிநாட்டு மது வகைகள் போல உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கிடங்கை கண்டறிந்தனர்.
தொடர் விசாரணையில், இந்த கிடங்கிற்கு, டில்லி மற்றும் புதுச்சேரி, ஹரியானாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, கிடங்கிற்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்ட அசோக் லேலாண்ட் டோஸ்ட் என்ற வாகனத்தை, இ.சி.ஆரில் மடக்கி சோதனை செய்தனர். அதில், 160 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கலைவாணன், சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில், சுனில் மற்றும் அவரின் சகோதரர் சுபாஷ் ஆகிய இருவரும் வணிக பார்சல் லாரிகளை பயன்படுத்தி, வெளிமாநிலங்களில் இருந்து போலி மதுபாட்டில்களை கடத்தி வந்து, ராயபுரம் கிடங்கில் பதுக்கி, வெளிநாட்டு மது வகைகள் என, பர்மா பஜாரில் விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சுபாஷ் மற்றும் கிடங்கு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

