/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ 'பீக் ஹவர்' நெரிசல் கூடுதல் பெட்டிகள் தேவை
/
மெட்ரோ 'பீக் ஹவர்' நெரிசல் கூடுதல் பெட்டிகள் தேவை
ADDED : ஜூலை 20, 2024 12:52 AM
சென்னை:சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில், மொத்தம் 54 கி.மீ., துாரத்தில், தலா நான்கு பெட்டிகள் உடைய 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒரு பெட்டியில் 200 பேர் வரை பயணிக்கலாம். அந்த வகையில், மெட்ரோ ரயில்களில், தினமும் 2.70 - 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.
குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் அலுவலக நேரங்களில், மெட்ரோ நிர்வாகம் கணக்குபடி 55 சதவீதம் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே, தேவைக்கேற்ப மெட்ரோ ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் பயணியர் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணியர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலுவலக நேரங்களில், விம்கோ நகர் - ஏர்போர்ட் தடத்தில் கிண்டி, சென்ட்ரல், ஆலந்துார், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட ரயில்களுக்கு, ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
எனவே, கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் அல்லது ஆறு பெட்டிகள் உடைய மெட்ரோ ரயில்களாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வாயிலாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகள் வரை பயணியர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதன்பின், புது மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்து, இயக்குவது அவசியமாகிறது.
தலா ஆறு பெட்டிகளை கொண்ட புது மெட்ரோ ரயில்கள் வாங்க முயற்சி எடுத்துள்ளோம். இதற்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மெட்ரோவில் ஒரு நாளில் வழக்கமாக 75 சதவீதம் பேர் பயணிக்கின்றனர். அதுவே, பீக் ஹவர்ஸ் நேரத்தில் 55 சதவீதமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.