/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகன ஆக்கிரமிப்பில் சிக்கிய நெற்குன்றம் இணைப்பு சாலை
/
வாகன ஆக்கிரமிப்பில் சிக்கிய நெற்குன்றம் இணைப்பு சாலை
வாகன ஆக்கிரமிப்பில் சிக்கிய நெற்குன்றம் இணைப்பு சாலை
வாகன ஆக்கிரமிப்பில் சிக்கிய நெற்குன்றம் இணைப்பு சாலை
ADDED : ஏப் 09, 2024 12:31 AM

கோடம்பாக்கம் மண்டலம் வடபழனியில், நெற்குன்றம் பாதை எனும் இணைப்பு சாலை உள்ளது. சூளைமேடில் இருந்து வடபழனி வழியாக விருகம்பாக்கம் செல்வோரின் பிரதான வழித்தடமாக, இந்த இணைப்பு சாலை உள்ளது.
பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்தவர்கள் மும்பை நெடுஞ்சாலையை அடைந்து, கோயம்பேடு, அசோக் நகர் பகுதிக்கு செல்லவும், பிரதான வழித்தடமாக விளங்குகிறது.
இச்சாலையில், வள்ளி திருமண மண்டபம், ஆண்டவர் கோவில் வாகன நிறுத்துமிடம், மூவர் ஜீவ சமாதி கோவில், தனியார் மருத்துவமனை உள்ளன. இதனால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும், நுாற்றுக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நெற்குன்றம் பாதை சாலை, 40 அடி அகலம் கொண்டது. அச்சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கேட்பாரில்லாத பழுதடைந்த வாகனங்களும், மாதக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், 'பீக்- ஹவர்ஸ்' வேளைகளில் நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், இச்சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை ஒட்டி, சிதறிக்கிடக்கும் உணவு கழிவுகளை தேடி, மாடு, நாய்கள் சங்கமிக்கின்றன. இதுவும் விபத்துகளுக்கு காரணமாகின்றன.
இது குறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் நிகழாதவாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட நெற்குன்றம் பாதையில், 'நோ- பார்க்கிங்' போர்டு வைத்து, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களை சிறைபிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
--- நமது நிருபர்- -

