/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி
/
சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி
சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி
சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி
ADDED : மே 30, 2024 12:27 AM
கோடம்பாக்கம்,
கோடம்பாக்கத்தில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 132வது வார்டு, கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, ஸ்டேஷன் வியூ சாலை உள்ளது.
இச்சாலை ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளாலும், கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்களாலும், எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படும்.
இந்த ஸ்டேஷன் வியூ சாலை, இதையொட்டி உள்ள அக்பராபாத் 1, 2வது தெரு மற்றும் கோபாலமேனன் சாலை சந்திப்புகளில், சாலை மற்றும் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள சிறிய உணவகங்கள், நடைபாதையில் அடுப்புகளை வைத்து உணவு சமைப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.
எனவே, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோடம்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
நடைபாதையில் கடைகள் அமைத்துள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால், அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. மேலும், கடைகளில் இருந்து காற்றில் பறக்கும் மசாலா துகள்களால் கண் எரிச்சல் ஏற்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக விசாரித்ததில், அக்பராபாத் 1, 2 ஆகிய தெருக்கள், 30 அடி அகல சாலை என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போது, இச்சாலை ஆக்கிரமிப்பால், 20 அடியாக சுருங்கியுள்ளது.
அதேபோல், ஸ்டேஷன் வியூ சாலையும் 40 அடி அகல சாலை. ஆனால், இருபுறம் ஆக்கிரமிப்பால், 20 அடியாக சுருங்கியுள்ளது.
ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் வந்து திரும்ப முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நிரந்த தீர்வு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.