/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைப்பிரிவு வரைபடங்கள் டிஜிட்டல் மயம் சி.எம்.டி.ஏ., தகவல்
/
மனைப்பிரிவு வரைபடங்கள் டிஜிட்டல் மயம் சி.எம்.டி.ஏ., தகவல்
மனைப்பிரிவு வரைபடங்கள் டிஜிட்டல் மயம் சி.எம்.டி.ஏ., தகவல்
மனைப்பிரிவு வரைபடங்கள் டிஜிட்டல் மயம் சி.எம்.டி.ஏ., தகவல்
ADDED : ஏப் 25, 2024 12:15 AM
சென்னை, 'சென்னை பெருநகரில், 1980 முதல் ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விரைவில் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர், ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகரில் மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்புதல் அடிப்படையில், அந்தந்த திட்டங்களில் மக்கள் மனை வாங்கி வீடு கட்டி குடியேறி உள்ளனர்.
இத்திட்ட பகுதிகளில், மக்கள் அதிக அளவில் குடியேறியுள்ள நிலையில் சாலைகள், பூங்காக்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் போது, நில அளவு தொடர்பாக பிரச்னை எழுகிறது. இது போன்ற மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோர் 'கிப்ட் டீட்' எனப்படும் கொடை ஆவணம் வாயிலாக, பொது பயன்பாட்டு நிலங்களை ஒப்படைத்துள்ளனர்.
இந்த நில அளவுகள் குறித்த உண்மை நிலவரத்தை மக்கள் அறிய முடியாத நிலை ஏற்படுகிறது.
இது குறித்து, தாம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன் கூறியதாவது:
சென்னை பெருநகரில், தற்போது புதிதாக ஒப்புதல் வழங்கப்படும் மனைப்பிரிவு விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதில் கூடுதலாக, 1989 முதல் 2004 வரையிலான கட்டட அனுமதி விபரங்களும் டிஜிட்டல் ஆவணங்களாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், 1980 முதல் 1999 வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட மனைப்பிரிவு அனுமதி விபரங்கள், இணையதளத்தில் இல்லை. இந்த விபரங்கள் வெளிப்படையாக இல்லாததால், பழைய மனைப்பிரிவுகளில் பொது இடங்கள் அளவுகள் அறிய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
எனவே, பழைய மனைப்பிரிவு அனுமதி விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சமூக வலைதளம் வாயிலாக அளித்த பதில்:
சி.எம்.டி.ஏ.,வில், 2000ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் வழங்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணங்கள் மேனுவல் முறையில் மட்டுமே உள்ளன. இந்த ஆவணங்களை தேடி எடுத்து, டிஜிட்டல் முறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முடிந்தவுடன், இந்த விபரங்கள் இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***

