ADDED : ஆக 20, 2024 12:58 AM

குன்றத்துார், பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாருக்கு, குன்றத்துாரில் தனிக்கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பாலவராயர் குளம், மலை அடிவாரத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குடிநீருக்காக பயன்பட்ட இக்குளம், தற்போது கழிவுநீர் கலக்கும் இடமாக இருந்தது.
இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் தொடர் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து இக்குளம் 2.12 கோடி ரூபாய் மதிப்பில், குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் சார்பில் துார்வாரி நடைபாதை, சுற்றுச்சுவர், மின்விளக்குகள் அமைத்து சீரமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதனால், படுமோசமாக காட்சியளித்த பாலவராயர் குளம், புத்துயிர் பெற்றுள்ளது. இக்குளத்தை வரும் 23ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்காக, குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

