/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலிபுதுநகருக்கு மெட்ரோ எம்.பி.,யிடம் கோரிக்கை
/
மணலிபுதுநகருக்கு மெட்ரோ எம்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:42 AM
மணலிபுதுநகர்:மணலிபுதுநகரில் 25க்கும் மேற்பட்ட நகர்களில், 1.20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 400க்கும் மேற்பட்ட, தொழிற்சாலைகள், 1,500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதிக்கு, ரயில் சேவை கிடையாது. மாறாக, பேருந்து சேவையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.
அதிலும், கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்புகளால், கடும் அவதியுற்று வருகின்றனர். விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டுமானாலும், 9 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, மெட்ரோ ரயில் சேவையை, மணலிபுதுநகர் வரை நீட்டிக்க வேண்டும் என, திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம், மணலிபுதுநகர் - மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவினர் மனு வழங்கியுள்ளனர். மேலும், தற்காலிகமாக, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், மணலிபுதுநகரில் இருந்து, மினி பஸ் இயக்கப்பட வேண்டும்.
மணலிபுதுநகர், சடையங்குப்பம் - ஜோதி நகர் இணைப்பு சாலையை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

