/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேங்கர் லாரிகள் ஒரு நாள் 'ஸ்டிரைக்'
/
டேங்கர் லாரிகள் ஒரு நாள் 'ஸ்டிரைக்'
ADDED : ஜூலை 10, 2024 12:07 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
சென்னை ஆசனுார் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் வேலு கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால் மாற்று வழியில் டேங்கர் லாரிகள் சென்றால் அதிக துாரமாகிறது. அதற்கான டீசல் பணம் தருவதில்லை. சிறு பிரச்னைக்கு கூட, ஐ.ஓ.சி.எல்., நிர்வாகம், லாரி ஒப்பந்தத்தை ரத்து செய்து சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறது.
இப்பிரச்னையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் ஐ.ஓ.சி.எல்., நிர்வாகம் பேச்சு நடத்தாவிட்டால், வரும் 26 ம் தேதி, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது' என, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் விடுத்த செய்திக்குறிப்பு:
சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய, சொந்த லாரிகள் வாயிலாக தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எவ்வித தடையும் இன்றி வழக்கம் போல், பெட்ரோல், டீசல் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.