ADDED : செப் 10, 2024 12:30 AM

அடையாறு, மயிலாப்பூரை சேர்ந்தவர் பாலு, 40. அடையாறு மண்டலம், 174வது வார்டில், துாய்மை பணியாளராக உள்ளார்.
நேற்று, அடையாறு, பரமேஸ்வரிநகர் முதல் தெருவில் வீடு தோறும் குப்பை சேகரித்து, பேட்டரி வாகனத்தில் சேகரித்தார். பின், அதை தரம் பிரித்து, அதற்கான தொட்டியில் கொட்டினார். அப்போது, காய்ந்த மலர்மாலையில் 3 சவரன் தங்க நகை சிக்கி இருந்தது.
அதே தெருவை சேர்ந்த காமாட்சி, 60, என்பவர் நகையை தேடி, பேட்டரிவாகனத்தை நோக்கி வந்தார். அவரிடம் நகை குறித்த அடையாளத்தை, சுகாதார பணியாளர் பாலு கேட்டார். அவரின் நகை தான் என்பது தெரிந்தது.
உடனே, மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில், நகையை காமாட்சியிடம் ஒப்படைத்தார்.
இரண்டு ஆண்டுக்கு முன், சாலையில் கிடந்த 2 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்தவர், பாலு. பாலுவை, காமாட்சியின் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.