/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளம்பர பேனர்கள் அகற்ற மாநகராட்சி 3 நாட்கள் கெடு
/
விளம்பர பேனர்கள் அகற்ற மாநகராட்சி 3 நாட்கள் கெடு
ADDED : ஆக 22, 2024 12:09 AM
விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி 3 நாட்கள் கெடு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பேனர் அகற்ற, மூன்று நாள் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீதிமன்ற வழக்கு தொடர்புடைய மற்றும் அனுமதி பெற்ற விளம்பர பேனர்கள் தவிர, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள், கட்டட உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குள் கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும்.
விளம்பர பலகை நிறுவுவதற்கு முன், அந்நிறுவனம் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றுள்ளதா என்பதை, கட்டட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் நிறுவப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
தவறும்பட்சத்தில், கட்டடத்தின் உரிமையாளர்கள் மீது கட்டட அனுமதி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாநகராட்சியில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தங்களது கடையின் பெயர் பலகையை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 பிரிவு 327ல் தெரிவித்துள்ளப்படி நிறுவப்பட்டிருந்தால், உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேநேரம், ஒரு பெயர் பலகைக்கு மேல் வைக்க, முறையாக அனுமதி பெற வேண்டும். கூடுதலாக பெயர் பலகை வைத்துள்ள விளம்பர நிறுவனங்கள், மூன்று தினங்களுக்குள் அகற்ற வேண்டும்.
விளம்பர நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் விதிகளுக்கு மாறாக வைத்துள்ள விளம்பர பலகைகளை அகற்றவில்லை என்றால், அபராதம் விதிப்பதுடன், விளம்பர பலகை கட்டுமானத்துடன் மாநகராட்சியால் அகற்றப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் போலீசில் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.