/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50,000 நோட்டு கட்டு தவறவிட்டவர் வரவழைத்து ஒப்படைத்த போலீசார்
/
ரூ.50,000 நோட்டு கட்டு தவறவிட்டவர் வரவழைத்து ஒப்படைத்த போலீசார்
ரூ.50,000 நோட்டு கட்டு தவறவிட்டவர் வரவழைத்து ஒப்படைத்த போலீசார்
ரூ.50,000 நோட்டு கட்டு தவறவிட்டவர் வரவழைத்து ஒப்படைத்த போலீசார்
ADDED : ஜூன் 30, 2024 12:20 AM

கே.கே., நகர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சிவசங்கர், 55. இவர், நுங்கம்பாக்கம் பகுதியில் 'கூரியர்' நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில், தன் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுக்க, நேற்று முன்தினம் 'சலான்' எழுதி கொடுத்தார்.
வங்கி அலுவலர், தலா 50,000 ரூபாய் என இரு கட்டுகளிலும், வங்கியின் பெயர் பொறித்த பட்டையில் வைத்து, அவரிடம் கொடுத்தார்.
கைப்பை எதுவும் எடுத்து செல்லாததால், பேன்ட்டின் இரு பாக்கெட்டுகளிலும் இரு கட்டுகளை வைத்து சிவசங்கர் புறப்பட்டார். தொழில் நிமித்தம் காரணமாக, தன் இருசக்கர வாகனத்தில் துரைப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
கே.கே., நகர் காசி திரையரங்கம் அருகே, பேன்ட் பாக்கெட்டில் இருந்து 50,000 ரூபாய் கட்டு ஒன்று தவறி, சாலையில் விழுந்தது. இதை, சிவசங்கர் கவனிக்கவில்லை. ஆனால், அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த கே.கே., நகர் போலீசார், அந்த பணக்கட்டை எடுத்தனர்.
பின், நோட்டு கட்டில் சுற்றியிருந்த பட்டையில் இருந்த வங்கியின் விபரங்களை பார்த்த போலீசார், அந்த வங்கிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து அவர்களிடம் விளக்கினர்.
புதிய கட்டு என்பதால், அதில் இருந்த சீரியல் எண்களை வைத்து, வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், போலீசார் கைப்பற்றிய பணம், சிவசங்கர் என்பவருக்கு சொந்தமானது என, ஊழியர்கள் கூறியதோடு, அவரது தொடர்பு எண்களையும், போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கே.கே., நகர் போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ், சிவசங்கரை தொடர்பு கொண்டு கே.கே.நகருக்கு வரவழைத்தார். ஆவணங்களை சரிபார்த்த பின், சிவசங்கர் தவறவிட்ட 50,000 ரூபாயை, அவரிடமே போலீசார் ஒப்படைத்தனர்.

