/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடரும் பயங்கரம் சிறுவனை கடித்த 'ராட்வீலர்'
/
தொடரும் பயங்கரம் சிறுவனை கடித்த 'ராட்வீலர்'
ADDED : ஜூன் 22, 2024 12:10 AM

குன்றத்துார், சென்னை, குன்றத்துார் அருகே 'ராட்வீலர்' நாய் கடித்ததில், 11 வயது சிறுவன் காயமடைந்தான்.
சென்னை குன்றத்துார் அருகே, கொழுமணிவாக்கம் சர்லஸ் நகரைச் சேர்ந்தவர்கள் ராகேஷ் - எலிசபெத் தம்பதி. இவர்களின் மகன் துஜேஷ், 11. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே துஜேஷ் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதேபகுதியில் வசிக்கும் நீலா என்பவர், தனது வீட்டில் வளர்க்கும் வெளிநாட்டு ராட்வீலர் இன நாயை, நடைபயற்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, உரிமையாளர் பிடியில் இருந்து விலகி ஓடிய நாய், சிறுவனின் தொடையைக் கடித்தது குதறியது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் நாயை விரட்டி, சிறுவனை மீட்டனர். இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில், சிறுவன் துஜேஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாங்காடு காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் இரண்டு ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
இதன் பிறகும், நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்தன. நாய்களை மற்றவர்களுக்கு தொந்தரவின்றி பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, மாநகராட்சி தரப்பிலும், போலீஸ் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மற்றொரு சம்பவமாக சிறுவனை வெளிநாட்டு இன நாய் கடித்துக் குதறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.