/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவரை கத்தியால் குத்திய பெண் கைது
/
கணவரை கத்தியால் குத்திய பெண் கைது
ADDED : ஜூன் 08, 2024 12:36 AM

கொருக்குப்பேட்டை, எண்ணுார், சத்தியவாணிமுத்து நகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 42. இவருக்கு ராஜேஸ்வரி, 40, என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். நேற்று, கொருக்குப்பேட்டை, மூன்றாவது தெரு, மூக்குப்பொடி கம்பெனி எதிரில் செல்வம் வேலை செய்துள்ளார்.
அங்கு வந்த அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர், செல்வத்திடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாய்த்தகராறு முற்றிய நிலையில் ராஜேஸ்வரி, சக்திவேல் ஆகியோர், கத்தியால் செல்வத்தை குத்திவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரை விசாரித்த கொருக்குப்பேட்டை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சக்திவேலை தேடி வருகின்றனர்.
ராயபுரத்தைச் சேர்ந்தவர் வேலு, 38. இவரது மனைவி ரம்யா. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி பிரிந்த நிலையில், ராயபுரம், பிச்சாண்டி தெருவைச் சேர்ந்த கணேஷ், 28, என்பவருடன் ரம்யா வாழ்ந்து வருகிறார். தன்னுடன் வாழ வேலு அழைத்த போது, ரம்யா ஏற்கவில்லை.
நேற்று, ராயபுரம் பி.வி.தெருவில் ரம்யாவும், கணேஷும் இருந்த போது, அங்கு வந்த வேலு, கத்தியால் ரம்யாவை சரமாரியாக வெட்டினார். கணேஷுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார், வேலுவை கைது செய்தனர்.