/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் இருந்து 12.50 லட்சம் பேர் மூன்று நாளில் சொந்த ஊர்களுக்கு பயணம்
/
சென்னையில் இருந்து 12.50 லட்சம் பேர் மூன்று நாளில் சொந்த ஊர்களுக்கு பயணம்
சென்னையில் இருந்து 12.50 லட்சம் பேர் மூன்று நாளில் சொந்த ஊர்களுக்கு பயணம்
சென்னையில் இருந்து 12.50 லட்சம் பேர் மூன்று நாளில் சொந்த ஊர்களுக்கு பயணம்
ADDED : அக் 30, 2024 07:23 PM
சென்னை:தீபாவளி பண்டிகை கொண்டாட, சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில், 12.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
சென்னையில் நேற்று மதியம் பல இடங்களில் திடீரென மழை பெய்ததால், பொது மக்கள் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்ல சிரமப்பட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம் பஸ் நிலையங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பஸ்கள் பிரித்து இயக்கப்பட்டன.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று கிளாம்பக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பஸ் இயக்கம் குறித்து, பயணியரின் கருத்து கேட்டார்.
சென்னையில் இருந்து நேற்று, 3வது நாளாக பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க, பயணியர் நீண்ட துாரம் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும், 2,092 பஸ்களோடு, 2,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர, பிற முக்கிய நகரங்களுக்கு இடையே, 1,450 பஸ்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்து பயணிக்க வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. பயணியருக்கான உதவி மையங்களும் அமைக்கப்பட்டு, தகவல்கள் அளிக்கப்பட்டன.
அரசு பஸ்களில் 5.50 லட்சம் பேர்
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த மூன்று நாட்களில், 4,900 சிறப்பு பஸ்கள் உட்பட, 11,100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. அரசு பஸ்களில் மட்டும், 5.50 லட்சம் பேர் பயணம் செய்திருப்பர்' என்றனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி பார்த்திபன் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணியருக்கு போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாமல் செல்லும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. நேற்று முன்தினம், ஒரே இடத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியதால், 'நெட்வொர்க்' ஸ்தம்பித்தது.
இதனால் ஏ.டி.எம்., இயந்திரங்கள், மொபைல் போன் டவர்கள் வேலை செய்யாமல், பயணியர் சிரமம் அடைந்தனர். பயணிகள் கூட்டம் குறைவதை தொடர்ந்து, நெட்வொர்க் தானாக வேலை செய்ய துவங்கியது. இனிவரும் காலங்களில் பயணியர் அதிகரித்தாலும், நெட்வொர்க் சீராக வேலை செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கு, தேவையான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்களில் 5 லட்சம் பேர்
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வே சார்பில், 48 சிறப்பு ரயில்கள், 258 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களோடு, சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை - திருநெல்வேலி, நாகர்கோவில், தாம்பரம் - நாகர்கோவில், சென்னை - கோவை வழித்தடங்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் மட்டும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.