/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்புக்கு லஞ்சம் உதவியாளருக்கு '2 ஆண்டு'
/
மின் இணைப்புக்கு லஞ்சம் உதவியாளருக்கு '2 ஆண்டு'
ADDED : அக் 04, 2024 12:21 AM
செங்கல்பட்டு, சென்னை ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர், தன் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்க, மேடவாக்கம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், 2012, மார்ச் 9ல் விண்ணப்பித்தார்.
இதற்கு ஒப்புதல் வழங்க, மின் வணிக உதவியாளர் ராஜேஷ்கண்ணன், 50, என்பவர், 1,800 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதையடுத்து தனசேகரன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய 1,800 ரூபாயை தனசேகரன் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜேஷ் கண்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, சென்னை போலீசார் மாற்றம் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ்கண்ணனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, அபராதத் தொகையை கட்டத்தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.