/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வசூல் முகவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிப்பு 3 ஐ.டி., அதிகாரிகள், சிறப்பு எஸ்.ஐ., சிக்கினர்
/
வசூல் முகவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிப்பு 3 ஐ.டி., அதிகாரிகள், சிறப்பு எஸ்.ஐ., சிக்கினர்
வசூல் முகவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிப்பு 3 ஐ.டி., அதிகாரிகள், சிறப்பு எஸ்.ஐ., சிக்கினர்
வசூல் முகவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிப்பு 3 ஐ.டி., அதிகாரிகள், சிறப்பு எஸ்.ஐ., சிக்கினர்
ADDED : டிச 19, 2024 12:18 AM

சென்னை, கலெக் ஷன் ஏஜன்டை காரில் கடத்திச் சென்று, 15 லட்சம் ரூபாய் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் மூவர், சிறப்பு எஸ்.ஐ., ஒருவர் என, நான்கு பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, நடராஜன் தெருவைச் சேர்ந்தவர் முகமது கவுஸ், 31. இவர், கடந்த ஓராண்டாக, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி நகர காங்கிரஸ் செயலர் ஜூனைத் அகமது, 36, என்பவரிடம், கலெக் ஷன் ஏஜன்டாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு, ஜூனைத் அகமதுவிற்கு சொந்தமான லைப் லைன் சி.டி., ஸ்கேன் சென்டருக்கு, புதிதாக இயந்திரம் வாங்க, 20 லட்சம் ரூபாயை முகமது கவுசிடம் கொடுத்து அனுப்பினார்.
கடந்த 16ம் தேதி சென்னை வந்த முகமது கவுஸ், இருசக்கர வாகனத்தில் 20 லட்சம் ரூபாயுடன், சி.டி., ஸ்கேன் இயந்திரம் வாங்க, சென்னை திருவல்லிக்கேணியை நோக்கி சென்றார்.
ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சட்டம் - ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐ., அவரது வாகனத்தை மடக்கி விசாரித்துள்ளார்.
பணம் எடுத்துச் செல்வதாக கூறியதும், வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் முகமது கவுசை ஒப்படைத்துள்ளார்.
விசாரணை நடத்துவதற்காக, முகமது கவுசை அழைத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மூவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே, கத்திமுனையில் 20 லட்சம் ரூபாய் பறித்தனர். பின், போனால் போகட்டும் என 5 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்து, அவரை இறக்கிவிட்டுச் சென்றனர்.
இது குறித்து, முகமது கவுஸ் அளித்த புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.
இதில், திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, என்பவர், முகமது கவுசை மடக்கி விசாரித்தது தெரியவந்தது. அவரிடம், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் அழகு விசாரித்தார்.
இதில், வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், 41, வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, வருமான வரித்துறை அதிகாரி பிரதீப், 42, ஆகியோர் திட்டமிட்டு, முகமது கவுசை மிரட்டி பணத்தை பறித்தது தெரிய வந்தது.
இதற்கு, சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங்கும் உடந்தையாக செயல்பட்டதும் தெரிய வந்ததது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சிறப்பு எஸ்.ஐ., ஏற்கனவே இதுபோன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோல், யாரிடம் எல்லாம் பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.