/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி மாநகராட்சியுடன் இணையும் 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
/
ஆவடி மாநகராட்சியுடன் இணையும் 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
ஆவடி மாநகராட்சியுடன் இணையும் 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
ஆவடி மாநகராட்சியுடன் இணையும் 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
ADDED : அக் 04, 2024 12:52 AM

ஆவடி, அபட்டாபிராம், திருமுல்லைவாயில், மிட்டனமல்லி, பருத்திப்பட்டு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து, 2019ல், தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக, ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது ஆவடி மாநகராட்சியில் நான்கு மண்டலம், 48 வார்டுகள், 65 சதுர கி.மீ., பரப்பளவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அவசர கதியில் மாநகராட்சியாக ஆவடி தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அருகில் உள்ள திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளும் ஆவடி மாநகராட்சியில் இணைக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், மாநகராட்சி விரிவாக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுதும் நகர்ப்புற வளர்ச்சி துறை கணக்கெடுப்பு நடத்தி, மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்க வேண்டிய ஊராட்சிகள் குறித்த பட்டியலை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், ஆவடி மாநகராட்சியுடன், திருநின்றவூர், திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி நகராட்சிகள் மற்றும் 19 ஊராட்சிகளை இணைத்து ஆவடி மாநகராட்சி விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் மக்கள் தொகை, குடியிருப்பு, வருமானம், குப்பை சேகரிப்பு வாகனங்கள், நிரந்தர ஊழியர்கள், சாலை, மின் விளக்கு, தற்காலிக ஊழியர் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் 2024 இறுதியில் முடிவடைகிறது. அதன்பின், ஆவடி மாநகராட்சியில் மூன்று நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. வரும் 2025 ஜனவரிக்குள் மாநகராட்சி விரிவாக்கத்தின் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ஆவடி மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் மக்கள் தொகை ஒன்பது லட்சத்தை கடக்கும் என கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஆவடி மாநகராட்சி விரிவாக்கத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்தது வரவேற்கத்தக்கது.
மாநகராட்சிக்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி, தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள், அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக பணியாற்றும் நிலையை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் சென்னை பெரு மாநகராட்சி போல், ஆவடி மாநகராட்சி வளர்ச்சி அடையும்.
- -டி.சடகோபன், 64,
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்