/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியாருடன் இணைந்து 600 மின்சார பஸ்கள்
/
தனியாருடன் இணைந்து 600 மின்சார பஸ்கள்
ADDED : பிப் 12, 2025 12:41 AM
சென்னை, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த ஐந்து ஆண்டுகளில், சென்னை மாநகர பேருந்துகளின் தேவை, 7,000க்கு மேல் இருக்கும். இந்த தேவையை, மாநகர போக்குவரத்து கழகத்தால் மட்டுமே முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கட்டண உயர்வு இன்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம்.
முதற்கட்டமாக, 500 மின்சார பேருந்துகளை இயக்க, ஆறு மாதங்களுக்கு முன், அசோக் லேலண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாம் கட்டமாக, 600 மின்சார பேருந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதில், 400 'ஏசி' பேருந்துகளும், 200 'ஏசி' வசதி இல்லாத பேருந்துகளும் இயக்கப்படும். இந்த பேருந்துகளை தயாரித்து வழங்குவதோடு, கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து இயக்க, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் இயக்கும் பேருந்துகளில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்துனர் நியமிக்கப்படுவர். வழக்கமான கட்டணத்தில் பயணிக்கலாம். 1 கி.மீ.,க்கு, 'ஏசி' வசதி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு, 77.16 ரூபாய்; 'ஏசி' பேருந்துகளுக்கு 80.86 ரூபாய் வீதம் ஒப்பந்ததாரருக்கு எம்.டி.சி., வழங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.