/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் காவல் நிலையம் அருகே கொடூரம் மாநகராட்சி ஊழியர் கத்தியால் அறுத்து கொலை
/
அம்பத்துார் காவல் நிலையம் அருகே கொடூரம் மாநகராட்சி ஊழியர் கத்தியால் அறுத்து கொலை
அம்பத்துார் காவல் நிலையம் அருகே கொடூரம் மாநகராட்சி ஊழியர் கத்தியால் அறுத்து கொலை
அம்பத்துார் காவல் நிலையம் அருகே கொடூரம் மாநகராட்சி ஊழியர் கத்தியால் அறுத்து கொலை
ADDED : ஜூலை 14, 2025 02:23 AM

அம்பத்துார்:அம்பத்துார் காவல் நிலையம் அருகே, மாநகராட்சி ஒப்பந்த ஊழியரின் வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்டார். மனைவி கண் முன்னே நடந்த இக்கொலையில் இரு ரவுடிகளை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
அம்பத்துார், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 28; ஒப்பந்த அடிப்படையில், வளசரவாக்கம் மண்டலத்தில், குப்பை அகற்றும் பேட்டரி வாகனம் ஓட்டி வந்தார். இவரது மனைவி ராணி, 26. மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அருணாச்சலத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 22, சீனிவாசன், 22, ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், அருணாச்சலத்தை மொபைல்போனில் தொடர்பு கொண்ட வினோத், அம்பத்துார் காவல் நிலையம் பின்புறம் அவரை வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த அருணாச்சலத்திடம், வினோத், சீனிவாசன் உட்பட நான்கு பேர், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், மறைத்து வைத்திருந்த கத்தியால், அருணாச்சலத்தின் மார்பு, தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
அருணாச்சலத்தின் மனைவி ராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கணவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அருணாச்சலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து, வினோத், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.
வினோத், சீனிவாசன் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒரு வழக்கில், போலீசார் வினோத்தை கைது செய்தனர். அதற்கு அருணாச்சலம் தான் காரணம் என எண்ணிய வினோத், சிறையில் இருந்து வெளியே வந்ததும், அருணாச்சலத்தை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அருணாச்சலம் மனைவி ராணி கூறியதாவது:
வினோத் தரப்பினர் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்து வருகின்றனர். என்னையும், என் மாமியாரையும் வினோத் தரப்பினர் ஆபாசமாக பேசுவர். இதையறிந்த என் கணவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
சம்பவ நாளன்று, வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த கணவரை வெளியே வரவழைத்த வினோத் தரப்பினர், பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கத்தியால், என் கண் முன்பே அவரது வயிறு, மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அறுத்தனர்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை மீட்க ஆம்புலன்ஸ் வாகனமும் சரியான நேரத்திற்கு வரவில்லை. நான் புகார் கொடுக்க சென்றபோது, காவல் நிலையம் முன்பே எனக்கு கொலை மிரட்டல் வந்தது. போலீசார் அவர்கள் பக்கம் உள்ளனர்.
இவ்வாறு ராணி கூறினார்.

