/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கிய காவலாளி அலட்சியத்தால் உயிரிழப்பு
/
விபத்தில் சிக்கிய காவலாளி அலட்சியத்தால் உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய காவலாளி அலட்சியத்தால் உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய காவலாளி அலட்சியத்தால் உயிரிழப்பு
ADDED : நவ 13, 2025 01:01 AM

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், எல்.ஐ.சி., நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 59. இவர், துரைப்பாக்கம் - -பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருந்தார்.
நேற்று முன்தினம், வழக்கம்போல இரவு பணிக்கு சென்றவர், 7.30 மணிக்கு, ரேடியல் சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கத்தை நோக்கி சென்ற 'ராயல் என்பீல்ட்' இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
பின், மோதிய இருசக்கர வாகன ஓட்டி, அவரை பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், சேகர் மது போதையில் இருந்ததால், அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல், அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையறிந்த சேகரின் மகள் மீனா, சம்பவ இடத்திற்கு வந்து, சேகரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இரவில் துாங்கிய சேகர், நேற்று காலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலின்படி சென்ற போலீசார், சேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர், மாடம்பாக்கம் பெரியார் நகர், தர்மராஜா தெருவை சேர்ந்த ஜெரோம் ஜார்ஜ், 23, எனவும், இவருக்கும் கை மற்றும் காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் தெரிந்தது. தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

