/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூடியே கிடக்கும் விளையாட்டு திடல் சீரமைத்து திறக்க வேண்டுகோள்
/
மூடியே கிடக்கும் விளையாட்டு திடல் சீரமைத்து திறக்க வேண்டுகோள்
மூடியே கிடக்கும் விளையாட்டு திடல் சீரமைத்து திறக்க வேண்டுகோள்
மூடியே கிடக்கும் விளையாட்டு திடல் சீரமைத்து திறக்க வேண்டுகோள்
ADDED : பிப் 16, 2024 12:29 AM

அமைந்தகரை, என்.எஸ்.கே., சாலையில் பல ஆண்டுகளாக, பராமரிப்பின்றி மூடியே கிடக்கும் சிறுவர் விளையாட்டுத் திடலை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை என்.எஸ்.கே., சாலையில், அம்மா உணவகம் அருகில், சென்னை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் செயல்படுகிறது.
இந்த மையத்தின் அருகில், சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளது. திடலில், இருக்கை வசதிகள், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை உள்ளன.
இவை முறையான பராமரிப்பின்றி இருந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் விளையாட்டுத் திடல் மூடப்பட்டது.
தற்போது, இங்கு விளையாட்டுத் திடல் இருப்பதே தெரியாத அளவிற்கு, ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அண்ணா நகர் மண்டலத்தில், விளையாட்டுத் திடல்கள் மற்றும் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பது கிடையாது. விளையாட்டுத் திடல்களில் மாடுகளை கட்டி வைப்பது உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.
அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ, என்.எஸ்.கே., சாலையிலுள்ள இந்த விளையாட்டுத் திடல் மூடப்பட்ட நிலையில், இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த விளையாட்டுத் திடலை, சுற்றுவட்டார மக்கள் மாலை மற்றும் காலை நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அருகில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் இருந்து குழந்தைகள் வந்து, இங்கு விளையாடினர்.
இதை அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மூடி, இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கமிஷனர் ராதாகிருஷ்ணன்,'விளையாட்டுத் திடல்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்திருந்தார். இதை கண்காணித்து பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.