/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடகளத்தில் அசத்தும் மாணவர் அபிநந்த்
/
தடகளத்தில் அசத்தும் மாணவர் அபிநந்த்
ADDED : அக் 20, 2025 04:29 AM

சென்னை: தடகளத்தில், தேசிய மற்றும் மாநில போட்டிகளில் 10ம் வகுப்பு மாணவர் அபிநந்த் அசத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோகன்; காவல் உதவி கண்காணிப்பாளர். இவரது மனைவி பிந்து; அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது 15 வயது மகன் அபிநந்த். ஏர்போர்ஸ் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தடகளத்தில், நீளம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் அசத்தி வரும் இவர், தேசிய மற்றும் மாநில போட்டிகளில், சாதனைகள் படைத்து வருகிறார்.
இவர், கடந்த மாதம் நடந்த மாநில தடகள போட்டியிலும், கடந்த 15ம் தேதி நிறைவு பெற்ற தேசிய தடகள போட்டியிலும், இரண்டு சாதனைகளை படைத்து, 'இரண்டு சாதனைகள் படைத்த வீரர்' என்ற பட்டம் பெற்றார். கடந்த ஓராண்டில் மட்டும் 20க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
ரோல் மாடல் இது குறித்து மாணவர் அபிநந்த் கூறுகையில், ''சிறுவயது முதலே நான் சாதனையாளராக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தேன். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான உசைன் போல்ட் என் ரோல் மாடலாக கொண்டுள்ளேன். என் சாதனைக்கு உதவியாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளரான அஜய் குமாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.
அபிநந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல்வேறு போட்டிகளில் பின் தங்கி இருந்தார். சிறு வயது முதலே கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான பயிற்சியால், அவர் தோல்வி கண்ட அனைத்து போட்டிகளிலும், இன்று புதிய சாதனைகளை படைத்து காட்டியுள்ளார். - அஜய், பயிற்சியாளர்.