ADDED : மார் 09, 2024 12:23 AM

ஆவடி, ஆவடி ---- திருத்தணி சாலையில், கவரைப்பாளையம் முதல் பட்டாபிராம் இந்து கல்லுாரி ரயில் நிலையம் வரை, 1 கி.மீ., துாரத்துக்கு, சாலையோரத்தில் கடைகள் ஆக்கிரமித்து இருந்தன.
அங்கிருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், இளநீர் கடைகள், டிபன் கடைகளை அகற்ற, சிறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
வியாபாரிகள் கடைகளை அகற்றாததால், ஆவடி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், ஆவடி போலீசார் உதவியுடன், நேற்று முற்பகல் 11:00 மணி முதல் சாலையோர கடைகளை அகற்ற துவங்கினர்.
'பொக்லைன்' இயந்திரம் மற்றும் லாரியுடன் அதிகாரிகள் வருவதை கண்ட சாலையோர வியாபாரிகள் பலர், தாமாக முன்வந்து கடைகளை பிரித்து தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை வரை, 60 சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கை தொடரும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

