ADDED : செப் 15, 2026 10:24 PM
ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45; மாநகர பேருந்து ஓட்டுநர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராஜ கணபதி கோவிலில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சுவாமி ஊர்வலம் சென்றுள்ளது. இரவு 10:30 மணியளவில், ஊர்வலம் வெங்கடேஷ்வரா நகர் 13வது தெருவில் பாதி துாரம் சென்று திரும்பியது. இதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஆனந்த், 35, மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினர் இடையே கைகலப்பாக மாறியது. இதில் அனீஷ்குமார் என்பவர் ஆனந்தின் நண்பரான புவனேஷ் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளார். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவு 12:30 மணியளவில் ஆனந்த், புவனேஷ் உள்ளிட்ட சிலர், அனீஷ்குமாரின் வீட்டிற்கு வந்து, அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அனீஷ்குமார், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்து, சமரசம் செய்ய பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றுள்ளனர். அங்கு மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்தரப்பை சேர்ந்த ஆனந்த், சீனிவாசனின் மார்பில் பலமாக குத்தியுள்ளார். இதில், சுருண்டு விழுந்த சீனிவாசன் உயிரிழந்தார்.
தகவலறிந்த ராமாபுரம் போலீசார், சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிந்து, வெங்கடேஷ்வரா நகர் 17வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்தை நேற்று காலை கைது செய்தனர். இவர் அ.ம.மு.க., 154 வட்ட முன்னாள் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கூட்டாளிகளான புவனேஷ் குமார், 26, காட்வின் அக் ஷய், 28, ஹரிஹரன், 27, ஜாகீர் அப்பாஸ், 26, தினேஷ், 27 உள்ளிட்டோரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
