/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டியூட்டி ப்ரீ' பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்
/
'டியூட்டி ப்ரீ' பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்
'டியூட்டி ப்ரீ' பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்
'டியூட்டி ப்ரீ' பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்
UPDATED : டிச 07, 2024 07:49 AM
ADDED : டிச 07, 2024 12:53 AM

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 'டியூட்டி ப்ரீ' பொருட்கள் எடுத்து வரும் பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணியர் வருகின்றனர்.
குடியுரிமை சோதனை முடித்துவிட்டு, சுங்கத்துறை சோதனையை கடந்து வெளியே செல்வர். இவர்களின் உடைமைகளில் ஏதேனும் சந்தேகிக்கும்படி தங்கம், மின் உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தால், சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்து பறிமுதல் செய்வர்.
முறையாக வரி செலுத்தாமல் கொண்டுவரும் பொருட்களுக்கு, சுங்க வரி செலுத்தும்படி கூற, சுங்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், சர்வதேச விமான நிலையங்களின் வருகை பகுதியில், 'டியூட்டி ப்ரீ' எனப்படும் வரி இல்லாமல் பொருட்கள் வாங்கும் கடைகள் இயங்குகின்றன.
இந்த கடைகளில் விலை உயர்ந்த சாக்லேட்கள், வாசனை திரவியங்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. பயணியர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து, வரி குறைவாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு வாங்கும் பொருட்களுக்கு சில எல்லை உண்டு. இப்படி விதிகளுக்கு உட்பட்டு பொருட்களை வாங்கி வந்தாலும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் கூறியதாவது:
வணிகம் தொடர்பாக சமீபத்தில் தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் சென்றுவிட்டு, சென்னை விமான நிலையம் திரும்பினேன். வெளிநாட்டுக்கு சென்று திரும்பும் போது, டியூட்டி ப்ரீ கடைகளில் சாக்லேட் மற்றும் உயர் ரக தின்பண்டங்கள், மதுபாட்டில்கள் வாங்குவது வழக்கம். அப்படி சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையில், சில பொருட்களை வாங்கினேன்.
அதிகாரிகள் சுங்க சோதனை செய்யும் போது, நான் கையில் வைத்திருந்த பொருட்களை பிரித்துப் பார்த்தனர்.
அதற்கான முறையான ரசீது, விதிகளுக்கு உட்பட்ட அளவில் வாங்கியதை காண்பித்தும், அவற்றை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர். காரணம் கேட்ட போது கண்டுகொள்ளாமல், நீண்ட நேரம் நிற்க வைத்து அலைக்கழித்தனர்.
பயணியர் பயன்பெறும் வகையில் தான், இந்த கடைகள் இயங்குகின்றன. ஆனால், இங்கு வாங்கும் பொருட்களை, ஏதோ கடத்தி வந்தது போல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.