/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதவி பொறியாளர் அலுவலகம் மாற்றம்: அ.தி.மு.க., போராட்டம்
/
உதவி பொறியாளர் அலுவலகம் மாற்றம்: அ.தி.மு.க., போராட்டம்
உதவி பொறியாளர் அலுவலகம் மாற்றம்: அ.தி.மு.க., போராட்டம்
உதவி பொறியாளர் அலுவலகம் மாற்றம்: அ.தி.மு.க., போராட்டம்
ADDED : ஜன 13, 2026 05:36 AM

திருவொற்றியூர்: உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில், நேற்று மதியம் நடந்தது. இதில், 77 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முதலாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சிவகுமார் பேசுகையில், 'வார்டு பணிகள் குறித்து கேட்டால் நிதி இல்லை என அதி காரிகள் கூறுகின்றனர்' என்றார்.
இதற்கு பதிலளித்த மண்டல குழு தலைவர் தனியரசு கூறியதாவது:
கவுன்சிலர்கள் கோரும் பணிகள் குறித்து அதிகாரிகள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாறாக, நிதி இல்லை என, நீங்களாகவே அந்த பணிகளை புறக்கணிக்க கூடாது. 5ம் தேதிக்குள், பொருள் விபரங்கள் வழங்கினால் மட்டுமே, கூட்டத்தை, 10ம் தேதிக்குள் நடத்த முடியும். மீறுபவர்கள் மீது, உதவி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்த பின், வெளியே வந்த ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், தன் வார்டில், கவுன்சிலர் அலுவலகம் அருகேயே செயல்பட்டு வந்த, உதவி பொறியாளர் அலுவலகம், ஆள்நடமாட்டம் இல்லாத பேசின் சாலை - சுடுகாடு அருகே மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
'உதவி பொறியாளர் அலுவலகத்தை காணவில்லை' என, பதாகைகள் ஏந்தி மண்டல அலுவலகம் முன், கட்சியினருடன் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவொற்றியூர் ஏழாவது வார்டு உதவி பொறியாளர் அலுவலகம், இடம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பதாகை ஏந்தி, மண்டல அலுவலகம் முன் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

