/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரதட்சணை புகாரை விசாரித்த பெண் இன்ஸ்., மீது தாக்குதல்
/
வரதட்சணை புகாரை விசாரித்த பெண் இன்ஸ்., மீது தாக்குதல்
வரதட்சணை புகாரை விசாரித்த பெண் இன்ஸ்., மீது தாக்குதல்
வரதட்சணை புகாரை விசாரித்த பெண் இன்ஸ்., மீது தாக்குதல்
ADDED : நவ 12, 2025 12:41 AM

புழல்: வரதட்சணை புகாரை விசாரித்த புழல் பெண் இன்ஸ்பெக்டரை, காவல் நிலைய வளாகத்திலேயே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புழல் அடுத்த, புத்தகரம், கடப்பா சாலை, ஜானகிராமன் நகரைச் சேர்ந்தவர் வருண், 28; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வடபழனி, சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவஸ்ரீ, 26, என்ற பெண்ணுக்கும், கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில், ஆடி மாதம் பிறந்ததால், பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து, தம்பதி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
தம்பதி இடையே பிரச்னை அதிகரித்ததால், கணவர், அவரது பெற்றோர் மீது யுவஸ்ரீ புகார் அளித்தார். அதேபோல் கணவர் தரப்பினரும், யுவஸ்ரீ மீது புகார் அளித்தனர். இதுகுறித்து, புழல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா வழக்கு பதிந்து விசாரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இரு தரப்பினரும் புழல் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் தடுத்த நிலையிலும், மோதல் முற்றியது.
அப்போது, வருணை கைது செய்யக்கோரி யுவஸ்ரீ தரப்பினர், காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்; சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.
அவர்களை, இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா மற்றும் பெண் போலீசார் தடுக்க முற்பட்டனர். அப்போது யுவஸ்ரீ தரப்பினர், இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்றார்.
போலீசார் தாக்கியதால் காயமடைந்ததாக கூறி, யுவஸ்ரீயும், அவரது தாயும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

