ADDED : ஜூலை 13, 2026 02:06 AM
மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
நீலாங்கரை: நீலாங்கரை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிகுமாரும், 28, அவரது நண்பர் முத்துகுமாரும், 32, வீட்டு மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். அப்போது, உயரழுத்த மின் கம்பியில் ரவிகுமாரின் கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற முத்துகுமார் தீக்காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியிடம் அத்துமீறியவருக்கு தர்ம அடி
மாதவரம்: பிராட்வேயில் இருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்த தடம் எண் '38ஏ' பேருந்தில், 20 வயது கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் பயணித்தார். வியாசர்பாடி அருகே, பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த லிங்கப்பன், 45, என்பவர், மாணவியை சீண்டியுள்ளார். சக பயணியர் அவரை தர்ம அடி கொடுத்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஐ.டி., ஊழியரிடம் போன் பறித்த இருவர் கைது
பழவந்தாங்கல்: நங்கநல்லுாரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் சோம்நாத், 46, நங்கநல்லுார் வோல்டாஸ் சாலையில் இரு நாட்களுக்கு முன் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அவரை மிரட்டி போன் பறித்தனர். பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து, ஆலந்துாரை சேர்ந்த வினோத்குமார், 21 மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ஆவடி: திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11ம் தேதி கோவிலுக்கு வெளியே வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிந்தது. ஓராண்டாக உண்டியல் திறக்கப்படாத நிலையில், அதில் 15,000 ரூபாய் காணிக்கை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய நடிகர் கைது
சென்னை: மதுரையைச் சேர்ந்தவர் திவாகர். இவர், 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற 'யூ டியூப்' சேனல் வைத்துள்ளார்; நடிகர். சில தினங்களுக்கு முன், கீழ்ப்பாக்கத்தில் செயல்படும், மற்றொரு 'யூ டியூப்' சேனல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு யூ டியூப் சேனல் ஊழியர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அங்கிருந்த கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்துள்ளார். மேலும், அந்த யூ டியூப் சேனல் தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க, 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். கீழ்ப்பாக்கம் போலீசார், திவாகரை நேற்று கைது செய்தனர். பின் ஜாமினில் விடுவித்தனர்.
