/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி அவதி
/
ஆவடி ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி அவதி
ADDED : பிப் 07, 2024 12:26 AM

ஆவடி, சென்னை புறநகர் ரயில் நிலையங்களில், முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக, ஆவடி ரயில் நிலையம் செயல்படுகிறது.
இங்கு தினமும் 280 மின்சார ரயில்கள், ஐந்து விரைவு ரயில்களில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், ஆவடி ரயில் நிலையத்தில் பயணியருக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
குறிப்பாக ரயில் நிலையத்தில், முறையான கழிப்பறை வசதி இல்லை.
ஏற்கனவே முதல் நடைமேடையில் இரண்டு, இரண்டாவது நடைமேடையில் ஒரு கழிப்பறை என, மொத்தம் மூன்று கழிப்பறைகள் இருந்தன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மூன்று கழிப்பறைகளும் மூடப்பட்டதால், வெகு துாரம் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர்.
மேலும், தவிர்க்க முடியாத நேரங்களில், ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் உள்ள, அலுவலக கழிப்பறையை பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, முதல் நடைமேடையில் மூடியிருந்த கழிப்பறைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், முதல் நடைமேடையில் இருந்த கழிப்பறைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.
இதனால், பெண் பயணியர் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி ரயில்வே நிர்வாகம், மூடியுள்ள கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெண் பயணி ஒருவர் கூறியதாவது:
தொலைதுார பயணத்தின் முடிவில், ஆவடி ரயில் நிலையம் வந்தடையும் போது, கழிப்பறை இல்லாமல் அவதிப்படுகிறோம். இது, புறநகரில் முக்கிய ரயில் நிலையம். ஆனால் இங்கு, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அலங்கோலமாக இருப்பது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

