/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறவைகள் சரணாலய பணி சாத்தாங்காடு ஏரியில் முடக்கம்
/
பறவைகள் சரணாலய பணி சாத்தாங்காடு ஏரியில் முடக்கம்
ADDED : ஏப் 17, 2025 11:48 PM

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டு, பழைய எம்.ஜி.ஆர்., நகர் அருகே, சி.பி.சி.எல்., நிறுவன சந்திப்பில், சாத்தாங்காடு ஏரி உள்ளது.
மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட ஏரி, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, 70 ஏக்கராக உள்ளது.
ஏரியை மீட்டு, பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றியூர் மண்டல பொறுப்பு உதவி கமிஷனராக செயல்பட்ட பால்தங்கதுரை என்பவர், ஏரியை சீரமைக்கும் பணியை துவங்கினார்.
அதன்படி, அம்பத்துாரில் குளம் வெட்டிய மண்ணை கொண்டு, சாத்தாங்காடு ஏரிக்கு கரை மற்றும் தீவு போன்ற அமைக்கும் பணி நடந்தது. அவர் இடமாறுதல் காரணமாக, அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
ரம்மியம்
இதற்கிடையில், 2024, ஜூலை, 12ல் நடந்த, திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில், சாத்தாங்காடு ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றி, பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏரி சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய், வேறு பணிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், சாத்தாங்காடு ஏரியில் சீரமைப்பு பணி முடக்கப்பட்டுள்ளது. பறவைகள் சரணலாயமாக மாற்றும் பணி கானல் நீராகிவிட்டது.
பகுதிவாசிகள் கூறியதாவது:
வெயில் காலத்திலும், ஏரி முழுதும் நிரம்பியிருப்பதால், கூழைக்கிடா உள்ளிட்ட பறவைகள் வருகை தந்துள்ளன.
அதனால், சாத்தாங்காடு ஏரியை சீரமைத்து, பறவைகள் சரணாலயம் அல்லது பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும். திருவொற்றியூர், மணலி ஆகிய இரு மண்டலங்களைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.