/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'
/
வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'
வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'
வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'
ADDED : மார் 15, 2024 12:43 AM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் 'சர்வீஸ்' செய்து கொண்டிருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினருமான அபிலாஷ், 35, என்பவர், பணம் எடுக்க வந்தார்.
அப்போது, ஏ.டி.எம்., மையம் வெளியே நின்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர், இயந்திரத்தில் சர்வீஸ் பணி நடப்பதால் காத்திருக்க வேண்டும் என அபிலாஷிடம் கூறினார்.
அதை மீறி உள்ளே நுழைந்த அபிலாஷ், இயந்திரத்தில் ஏ.டி.எம்., கார்டை செலுத்த முயன்றார்.
அங்கு பணியில் இருந்த பொறியாளர் அவரை தடுத்தார். இப்போது பணம் எடுத்தால், இயந்திரத்தில் கோளாறு ஏற்படும் என கூறியுள்ளார்.
அதையும் கண்டுகொள்ளாத அபிலாஷ், பணம் எடுக்க முயற்சித்தபோது, வங்கி உதவி மேலாளர் பிரதீப் அவரை தடுத்து நிறுத்தினார். பதிலுக்கு அபிலாஷ், அவரை தள்ளிவிட்டு சென்றார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபிலாஷ், பிரதீப்பை அநாகரிகமாக பேசி, காலணியால் அடித்து தாக்கினார்.
இதுகுறித்து பிரதீப் புகாரின்படி வழக்குப் பதிந்த மணவாள நகர் போலீசார், அபிலாஷை கைது செய்தனர். திருவள்ளூர் ஜே.எம்., - 2 நீதிபதி பவித்ரா முன் நேற்று ஆஜர்படுத்தி, சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அபிலாஷின் தாய் ஜெயந்தி, வெங்கத்துார் ஊராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

